கோத்தகிரியில், ரூ.20 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்


கோத்தகிரியில், ரூ.20 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 11:05 PM GMT)

கோத்தகிரியில், ரூ.20 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோத்தகிரி,

நீலகிரியில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் உள்ள குறுகிய வளைவுகளை அகலப்படுத்துதல், தடுப்புச்சுவர் மற்றும் மழைநீர் வடிகால்கள் கட்டுதல் போன்ற சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சாலையோரங்களில் புதர் செடிகளை அகற்றி, ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களில் அடைப்புகளை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை சீசனில் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். அப்போது ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு ஏராளமான வாகனங்கள் செல்லும்.

இதையொட்டி ஊட்டி-கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரவேனு முதல் குஞ்சப்பனை வரை உள்ள பகுதி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. மேலும் அந்த சாலையில் குறுகிய வளைவு இருந்த தவிட்டுமேடு பகுதி பல லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தப்பட்டது. தற்போது கொட்டக்கம்பை பகுதியில் உள்ள குறுகிய வளைவும் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அங்கு தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் காம்பாய் கடை பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் குறுகிய வளைவை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் அங்கு செல்லும் நீரோடையை ஒட்டி தடுப்புச்சுவர் கட்டும் பணியும் மும்முரமாக நடக்கிறது. அரவேனு பகுதியில் இருந்து கோத்தகிரி வரையும், கோத்தகிரியில் இருந்து கட்டபெட்டு வரையும் சாலையை சீரமைக்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு கோத்தகிரி பகுதியில் பகல் நேரத்தில் சாலை பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள், அலுவலக ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story