வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது


வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 15 March 2019 10:00 PM GMT (Updated: 15 March 2019 5:49 PM GMT)

பாளையங்கோட்டையை அடுத்த இட்டேரி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

நெல்லை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான மனு தாக்கல் வருகிற 19-ந் தேதி தொடங்கி, 26-ந் தேதி வரை நடக்கிறது. 27-ந் தேதி மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுகிறது. 29-ந் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23-ந் தேதி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆங்காங்கே வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாளையங்கோட்டையை அடுத்த இட்டேரியில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், “வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை ஆகும். பொது தேவைகளை கேட்டு பெற இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும். தேர்தலில் அனைவரும் பங்கேற்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

பின்னர் அந்த பகுதி மக்களுக்கு வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி ஓட்டு போட வேண்டும் என செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை தாசில்தார் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story