திருப்பூரில், ஊடக சான்று கண்காணிப்புக்குழு மையம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்தார்


திருப்பூரில், ஊடக சான்று கண்காணிப்புக்குழு மையம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 15 March 2019 11:04 PM GMT (Updated: 15 March 2019 11:04 PM GMT)

திருப்பூரில் ஊடக சான்று கண்காணிப்புக்குழு மையத்தை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

திருப்பூர்,

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்றுகாலை நடைபெற்றது. இந்த மையத்தை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் வேட்பாளர்களின் விளம்பரங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும். 8-க்கும் மேற்பட்ட டி.வி.க்கள் வைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட சேனல்களை கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளூர் டி.வி. சேனல்களில் வேட்பாளர்கள் குறித்த விளம்பரங்களை பதிவு செய்து இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட உள்ள பொதுப்பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரியின் ஒப்புதலோடு சமர்ப்பிக்கப்படும். ஊடக விளம்பரங்களை இந்த மையத்தில் ஒப்புதல் சான்று பெற்று வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் குறித்த விவரங்களை பத்திரிகை செய்தியாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஊடக மையம்(மீடியா சென்டர்) செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கீதா பிரியா, மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) ஜெயபாலன், உதவி திட்ட அதிகாரி(கணக்கு) ராதா, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story