திருமானூர் அருகே நந்திபெருமானுக்கு திருக்கல்யாணம்


திருமானூர் அருகே நந்திபெருமானுக்கு திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 16 March 2019 10:30 PM GMT (Updated: 16 March 2019 7:17 PM GMT)

திருமானூர் அருகே நந்திபெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருமழபாடி கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல்பெற்றதும், வசிஷ்டர், அகஸ்தியர் ஆகிய முனிவர்களால் பூஜிக்க பெற்றதுமாகும்.

இக்கோவிலில் நந்திபெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த நந்தி திருக்கல்யாணத்தை கண்டால் முந்திக் கல்யாணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. முன்னதாக திருவையாறு அய்யாரப்பர் கோவிலில் இருந்து வசிஷ்ட முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவி பல்லகில் பெண் அழைப்பாக கொண்டு வரப்பட்டார்.

திருக்கல்யாணம்

பின் அதனை தொடர்ந்து சுந்தராம்பிகை மற்றும் வைத்தியநாத சுவாமிகள் ஒரு பல்லக்கிலும், நந்தி பெருமான் மற்றும் சுயசாம்பிகை மற்றொரு பல்லக்கிலும் கோவிலை சுற்றி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து கோவிலின் முன்பு உள்ள திருமண மேடைக்கு வந்தடைந்தனர். அதனையடுத்து அங்கு சுயசாம்பிகை தேவிக்கும், நந்தி பெருமானுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் மணமக்களுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு ஊஞ்சலில் அமர்த்தப்பட்டனர். அங்கு ஊஞ்சலில் ஆடியபடி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சுயசாம்பிகை மற்றும் நந்திபெருமான் கண்ணாடி பல்லக்கில் அமர்ந்து திருமண கோலத்தில் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தனர். விழாவில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story