தோகைமலையில் வாகன சோதனை: ஆடு வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்


தோகைமலையில் வாகன சோதனை: ஆடு வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 16 March 2019 11:00 PM GMT (Updated: 16 March 2019 7:36 PM GMT)

தோகைமலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது ஆடு வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன், போலீசார் ஆனந்தன், சரவணன், அருண் ஆகியோர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சம் பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து ஆட்டோவில் வந்த 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் சிவானந்தாபுரத்தில் உள்ள மச்சுவாடியை சேர்ந்த மாரிமுத்து (வயது 49) என்பதும், ஆடு வியாபாரம் செய்து வரும் இவர் அதேபகுதியில் உள்ள டிரைவர் வீரப்பன் (45) என்பவருடன் சரக்கு ஆட்டோவில் கரூர் பகுதியில் செம்மறி ஆடுகள் வாங்க வந்ததும் தெரியவந்தது.

பணத்திற்கு எந்தவிதமான ஆவணமும் அவர்களிடம் இல்லாத காரணத்தால், பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் துணை அலுவலர் லியாகத்திடம் ஒப்படைத்தனர். அதனை தேர்தல் நடத்தும் துணை அலுவலர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Next Story