திருச்சி நாடாளுமன்ற தேர்தல்: அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு


திருச்சி நாடாளுமன்ற தேர்தல்: அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 6:35 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.தேர்தல் செலவின பார்வையாளர் இன்று திருச்சி வருகிறார்.

திருச்சி,

இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 10-ந் தேதி முதலே நடைமுறைக்கு வந்து விட்டன. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி முதல் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மாவட்ட அளவிலான தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு வரப்பெறும் தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் பறக்கும் படை உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்வதாகவோ அல்லது வாகனங்களில் எடுத்து செல்வதாகவோ பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்தால், அவர்களது பெயர் ரகசியமாக வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பறக்கும் படையினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் பாராளுமன்ற தேர்தலில் முதன் முதலாக வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவற்றுடன் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை அறியும் ‘வி.வி.பேட்’ கருவியும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பொருத்தப்படுகிறது. இதுதொடர்பாக வாக்குச் சாவடி வாரியாகவும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் போதிய அளவு மாவட்ட நிர்வாகம் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இதுவரை ஒரு கம்பெனி (85 பேர்) துணை ராணுவ படையினர் திருச்சிக்கு வந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் கொடி அணிவகுப்பும் மாநகரில் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையம் முன்பிருந்து கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், செந்தில்வேல்குமார் ஆகியோர் முன்னிலையில் துணை ராணுவப்படையினர் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பு நடத்தினர். காந்தி மார்க்கெட், தஞ்சை ரோடு, தாராநல்லூர், கீழபுலிவார்டு, சின்னகடை வீதி, என்.எஸ்.பி.ரோடு, நந்திகோவில் தெரு, சிந்தாமணி அண்ணாசிலை வழியாக காமராஜ் சிலை முன்பு கொடி அணிவகுப்பு முடிவடைந்தது. இதேபோல் ஸ்ரீரங்கம் பகுதியிலும் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதற்கிடையே வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு வழக்குகளை ஆய்வு செய்யும், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் அனுப்குமார் வர்மா இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சி வருகிறார். மேலும் சில தேர்தல் பார்வையாளர்கள் ஓரிரு நாளில் திருச்சிக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story