வேட்பு மனுதாக்கல் இன்று தொடக்கம்: கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு


வேட்பு மனுதாக்கல் இன்று தொடக்கம்: கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 8:15 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட கலெக்டரிடமும், திருச்சி வருவாய் கோட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் இன்று முதல் 26-ந் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட வேட்பு மனுக்கள் 27-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில் திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்படும். வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை 29-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அன்று மாலை 3 மணிக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந் தேதி அன்று நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ந் தேதி அன்று நடக்கிறது.

வேட்பு மனுதாக்கலின்போது பொதுப்பிரிவு வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ரூ.25 ஆயிரம் ரொக்கமாகவோ அல்லது டி.டி.-யாகவோ செலுத்த வேண்டும். காசோலை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எஸ்.சி.பிரிவு வேட்பாளர்களாக இருந்தால் ரூ.12,500 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். மனுதாக்கலின்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் அனுமதிக்கப்படுவார்கள். தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஒருவர் முன்மொழிந்தால் போதுமானது. அதே வேளையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும். முன்மொழிபவர்கள் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டவர்களாகவும், வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயரும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியால் வழங்கப்பட்ட அசல் படிவம் ஏ, பி ஆகியவற்றை அளிக்க வேண்டும். இதில் நகல் இருக்க கூடாது. புதிதாக வங்கி கணக்கு எண் தொடங்கப்பட்ட பாஸ் புத்தகம் நகல் உள்ளிட்ட 16 வகையான விதிகளை பின்பற்ற தேர்தல் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்களை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் ஊர்வலமாக அழைத்து வந்தால், வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்தில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அதற்காக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்புள்ள பிரதான சாலையில் ‘100 மீட்டர்’ என குறியீடு செய்யப்பட்ட எல்லைக்கோடு போடப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து மனுதாக்கல் செய்யும் அறை வரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குவதையொட்டி, நேற்று கலெக்டர் அலுவலகம் வரவேற்பு ஹால் மற்றும் இதர இடங்களில் கூடுதலாக சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் 6 தொகுதிகள் அடங்குகிறது. இந்த 6 தொகுதிகளிலும் மொத்தம் 14 லட்சத்து 89 ஆயிரத்து 267 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதன்படி, திருச்சி மேற்கு-2,57,089, திருச்சி கிழக்கு-2,44,662, ஸ்ரீரங்கம்-2,91,711. திருவெறும்பூர்-2,79,937, புதுக்கோட்டை-2,26,762, கந்தர்வகோட்டை-1,89,106 என மொத்தம் 14 லட்சத்து 89 ஆயிரத்து 267 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 

Next Story