பழவேற்காட்டில் சினிமா படப்பிடிப்பு குழு சென்ற கார் கவிழ்ந்தது; உதவியாளர் பலி


பழவேற்காட்டில் சினிமா படப்பிடிப்பு குழு சென்ற கார் கவிழ்ந்தது; உதவியாளர் பலி
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 9:30 PM GMT)

பழவேற்காடு அருகே சினிமா படப்பிடிப்பு குழு சென்ற கார் கவிழ்ந்தது. இதில் உதவியாளர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொன்னேரி,

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் நாவலர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). சினிமா படப்பிடிப்பு குழுவில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் படப்பிடிப்பு நடத்துவதற்காக இடத்தை தேர்வு செய்ய கார்த்திக், டாக்டர் விஜயகுமார் மற்றும் அஸ்வின்குமார் ஆகிய 3 பேர் காரில் பழவேற்காடு பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

படப்பிடிப்பு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்துவிட்டு 3 பேரும் வீட்டிற்கு காரில் புறப்பட்டனர். நள்ளிரவில் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி நோக்கி நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டு இருந்தனர். பழவேற்காடு அருகே ஆண்டார்மடம் கிராமம் அருகே வளைவில் வேகமாக கார் வந்தது.

அப்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த கல் மீது கார் மோதியது. மோதிய வேகத்தில் பழவேற்காடு ஏரியில் தலைகுப்புற கார் கவிழ்ந்தது. இதில் கார்த்திக் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அந்த வழியாக சென்ற பழவேற்காடு மக்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

இதனையடுத்து 3 பேரையும் ஆம்புலன்சில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கார்த்திக் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story