தேர்தல் விதிகள் மீறல்: அ.தி.மு.க., தி.மு.க.வினர் உள்பட 70 பேர் மீது வழக்கு


தேர்தல் விதிகள் மீறல்: அ.தி.மு.க., தி.மு.க.வினர் உள்பட 70 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 9:51 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க.வினர் உள்பட 70 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் தேர்தல் தொடர்பான சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை, அந்தந்த கட்சியினரே மறைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு கொடிக் கம்பங்களை மறைக்காதபட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும் சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் எழுதுதல், சுவரொட்டி ஒட்டுதல், கொடிக்கம்பங்கள் நடுதல் உள்பட தேர்தல் விதிமீறல் தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் கடந்த 14-ந்தேதி 14 பேர் மீதும், 15-ந்தேதி 37 பேர் மீதும், 16-ந்தேதி 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த 6 பேர், அ.தி.மு.க.வினர் 2 பேர் மற்றும் பா.ஜனதா, தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தலா ஒருவர் என 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களில் மொத்தம் 70 பேர் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story