சிறு விவசாயிகளுக்கு மானிய விலையில் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரம் வழங்கும் பணி மும்முரம்


சிறு விவசாயிகளுக்கு மானிய விலையில் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரம் வழங்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 18 March 2019 10:56 PM GMT (Updated: 18 March 2019 10:56 PM GMT)

சிறு விவசாயிகளுக்கு மானிய விலையில் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரம் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பச்சை தேயிலை விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதிய வருவாய் கிடைக்காததால் தேயிலை தோட்டங்களை பராமரிக்க முடியாத நிலை, தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை விவசாயிகளுக்கு உள்ளது. இது தவிர உரங்களின் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் தினமும் அறுவடை செய்யும் பச்சை தேயிலையால் நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

கூடலூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதுதவிர கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் விவசாயிகள் உறுப்பினர்களாக பதிவு செய்து, தங்களது தோட்டங்களில் விளையும் பச்சை தேயிலையை தினமும் பறித்து வழங்கி வருகின்றனர். இதனால் தோட்ட தொழிலாளர்களை கொண்டு பச்சை தேயிலை பறிக்கப்படுகிறது. இத்தொழிலில் வருவாய் கிடைக்காததால் தோட்ட தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால் தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணியும் பாதிக்கப்படுகிறது. உரிய காலத்தில் பச்சை தேயிலை பறிக்காமல் விடுவதால், அதன் தரமும் குறைந்து விடுகிறது. பல தொழிலாளர்கள் சேர்ந்துசெய்ய வேண்டிய பணியை சிறு விவசாயிகளால் விரைவாக மேற்கொள்ள முடிய வில்லை. இதனால் குன்னூர் இன்கோ சர்வ் நிர்வாகம் மூலமாக சிறு விவசாயிகளுக்கு பச்சை தேயிலை பறிக்கும் எந்திரம் மானிய விலையில் வழங்கும் பணி கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கூட்டுறவு தொழிற்சாலை கள விளக்க அலுவலர் மணிகண்ட குமார் கூறியதாவது:-

1 மணி நேரத்தில் 200 கிலோ பச்சை தேயிலை பறிக்கும் எந்திரம் வெளிமார்க்கெட்டில் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.49 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகம் மானியம் விலையில் ரூ.20 ஆயிரத்து 600 மற்றும் ரூ. 31 ஆயிரத்து 300 என இருவேறு விலைகளில் சிறு விவசாயிகளுக்கு நவீன எந்திரங்களை வழங்கி வருகிறது. 1 லிட்டர் பெட்ரோலில் 2 மணி நேரம் எந்திரம் இயங்கும். மேலும் 200 கிலோ பச்சை தேயிலையை மிக விரைவாக அறுவடை செய்ய முடியும். இதனால் சிறு விவசாயிகளுக்கு நேரம் வீணாவது தடுக்கப்படும். எந்திரத்தை இயக்குவது குறித்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 200 எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இன்னும் அதிக விவசாயிகள் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரம் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினர்.


Next Story