இளநீர் குடித்த பிரச்சினையில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபர் கைது


இளநீர் குடித்த பிரச்சினையில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 March 2019 10:15 PM GMT (Updated: 19 March 2019 7:39 PM GMT)

இளநீர் குடித்த பிரச்சினையில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சோமரசம்பேட்டை,

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூர் அருகே உள்ள சின்ன ஆலம்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 55). இவரது தம்பி ராஜகோபால் (53) தொழிலாளிகளான இவர்களது வீடு அருகருகே உள்ளது. வீட்டின் அருகே இருவருக்கும் சொந்தமான தென்னை மரம் உள்ளது. சம்பவத்தன்று முத்து அந்த மரத்தில் இருந்து இளநீர் பறித்து குடித்ததாக தெரிகிறது.

இதனை ராஜகோபாலின் மகன் சுப்பிரமணியன் பார்த்து, எனது பிள்ளைக்கு இளநீர் கொடுக்க கூடாதா? என்று கேட்டுள்ளார். இதனால் முத்துவுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். இந்த நிலையில் முத்துவின் வீட்டுக்கு அவரது மருமகனான திருச்சி லால்குடி பெருவளநல்லூரைச் சேர்ந்த சக்திவேல் (32) என்பவர் வந்துள்ளார். அப்போது, இளநீர் பிரச்சினை தொடர்பாக அவரிடம் கூறப்பட்டதாக தெரிகிறது.

சிறிது நேரத்தில் மது அருந்தி விட்டு வந்த சக்திவேல் ராஜகோபால் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். மேலும் சக்திவேல் கல்லால் ராஜகோபாலை தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த முத்து மருமகனை திட்டி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் அவரையும் கல்லால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த முத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர் சுப்பையா, இனாம்குளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜகோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு சக்திவேலை கைது செய்தனர். 

Next Story