வாகன சோதனையில் வியாபாரிகளிடம் ரூ.4½ லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை


வாகன சோதனையில் வியாபாரிகளிடம் ரூ.4½ லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 8:15 PM GMT)

குளித்தலை அருகே வாகன சோதனையில் வாழைக்காய், தேங்காய் வியாபாரிகளிடம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குளித்தலை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. மேலும் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு ஆகியவை அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கீழகுறப்பாளையம் பிரிவு சாலை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் மற்றும் போலீஸ்காரர்கள் சரவணன், ஆனந்த், அருண் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, வேனில் இருந்தவர் ரூ.1 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் கேரள மாநிலம் மலப்புறம் வள்ளுவம்காடு பகுதியை சேர்ந்த அப்துல்சலாம்(வயது 37) என்பது தெரியவந்தது. வியாபாரியான அவர் திருச்சிக்கு வாழைக்காய் வாங்க வந்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் தொடர்ந்து பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு சரக்கு வேனை நிறுத்தி, அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் வந்த வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த இளங்கோவனிடம்(60) ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் இருந்தது. இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, வியாபாரியான அவர் கொப்பரை தேங்காய் வாங்குவதற்காக வெள்ளக்கோவிலில் இருந்து தஞ்சாவூர் செல்வதாக கூறியுள்ளார். அவர் வைத்திருந்த தொகைக்கு உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பேரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் வழங்கினார்கள். 

Next Story