திருப்போரூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி தொழில் அதிபரிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்தவர் கைது


திருப்போரூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி தொழில் அதிபரிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 19 March 2019 10:15 PM GMT (Updated: 19 March 2019 9:34 PM GMT)

திருப்போரூர் அருகே படூர் கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்தி தொழில் அதிபரிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 45). தொழில் அதிபரான இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து டயர் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தங்களது நிறுவனத்தின் பணத்தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்காக திருப்போரூர் வட்டம் படூர் கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்தி வரும் பஞ்சா என்கின்ற பஞ்சாட்சரம் (வயது 40) என்பவரிடம் 3 சீட்டுகளில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.

இந்த நிலையில் 3 சீட்டுகளிலும் மொத்தம் ரூ.43 லட்சத்தை வேலாயுதம் மற்றும் அவரது நண்பர்கள் செலுத்தினர். ஆனால் பஞ்சாட்சரம் சீட்டை சரிவர நடத்தாமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த வேலாயுதம், சீட்டு பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்யும் நோக்கத்துடன் பஞ்சாட்சரம் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காஞ்சீபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வேலாயுதம் புகார் செய்தார். இதையடுத்து டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சீட்டு பணத்தை பஞ்சாட்சரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து செங்கல்பட்டு தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் பஞ்சாட்சரம் பல்வேறு ஏலச்சீட்டுகளை நடத்தி உள்ளதால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story