ஆவணம் இன்றி ஆட்டோவில் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


ஆவணம் இன்றி ஆட்டோவில் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 9:42 PM GMT)

வேதாரண்யம் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேதாரண்யம்,

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செங்காத்தலை பாலம் அருகே நேற்று தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் மறித்து சோதனையிட்டனர். சோதனையில் சரக்கு ஆட்டோவில் ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்களை கேட்டனர்.

ஆனால் அவரிடம் எந்த ஆவணமும் இல்லை. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வேதாரண்யம் தாசில்தார் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர்.

Next Story