திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10¼ லட்சம் தங்க தகடுகள் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10¼ லட்சம் தங்க தகடுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2019 11:15 PM GMT (Updated: 20 March 2019 6:56 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10¼ லட்சம் மதிப்புள்ள தங்க தகடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் அதை கடத்தி வந்த சென்னை பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். இதில் சில பயணிகள் கடத்தி வரும் தங்கம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமது அஜித் என்ற பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 40-க்கும் மேற்பட்ட செல்போன் பேட்டரிகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், செல்போன் பேட்டரிகளை வெளியே எடுத்து பிரித்துப்பார்த்தனர்.

அப்போது, அந்த பேட்டரிகளுக்குள் 40 தங்க தகடுகள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 24 காரட் மதிப்பு கொண்ட அந்த தங்கத்தகடுகள் மொத்தம் 319 கிராம் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.10¼ லட்சம் ஆகும்.

இதைத்தொடர்ந்து செல்போன் பேட்டரிகளையும், தங்கத்தகடுகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், முகமது அஜித்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story