பள்ளிபாளையம் மெக்கானிக், மனைவி- மகள்களுடன் தீக்குளிக்க முயற்சி - கந்துவட்டி கொடுமையால் விபரீதம்


பள்ளிபாளையம் மெக்கானிக், மனைவி- மகள்களுடன் தீக்குளிக்க முயற்சி - கந்துவட்டி கொடுமையால் விபரீதம்
x
தினத்தந்தி 20 March 2019 11:15 PM GMT (Updated: 20 March 2019 9:03 PM GMT)

கந்துவட்டி கொடுமையால் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனைவி-மகள்களுடன் பள்ளிபாளையம் மெக்கானிக் தீக்குளிக்க முயன்றார்.

கரூர்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 42). இவரது மனைவி பீனாமோள் (38). இந்த தம்பதிக்கு சகாய சப்னாமேரி (14), ஜெசிதாமேரி (9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மெக்கானிக்கான அந்தோணிராஜ் கரூர் பெரிய வடுக்கப்பட்டியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இதற்காக அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் மனைவி, மகளுடன் அந்தோணிராஜ் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் அந்தோணிராஜ் அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.45 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக மாதந்தோறும் 10 சதவீதம் வட்டி கட்டி வந்துள்ளார். இதனிடையே கடன் கொடுத்த நபர் தனக்கு கூடுதலாக வட்டி தரவேண்டும் என்று அந்தோணிராஜிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அந்தோணிராஜ் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களை எடுத்து சென்றதோடு, அசலுடன் கூடுதல் வட்டி தர வேண்டும் என மிரட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அந்தோணிராஜ் நேற்று காலை தனது மனைவி பீனாமோள், மகள்கள் சகாயசப்னாமேரி, ஜெசிதாமேரி ஆகியோருடன் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அப்போது கையில் மண்எண்ணெய் கேனையும் கொண்டு வந்துள்ளார்.

அப்போது திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அந்தோணிராஜ் தன் உடல் மீதும், தனது மனைவி, மகள்கள் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்க முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், 4 பேரின் உடல்களிலும் தண்ணீரை ஊற்றி, அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தாங்கள் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகி இருக்கும் விவரத்தை கூறினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நடைபெற்று வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பை மீறி கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த மெக்கானிக் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story