குமரி மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்க தடை கலெக்டர் தகவல்


குமரி மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்க தடை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 March 2019 10:45 PM GMT (Updated: 20 March 2019 9:35 PM GMT)

குமரி மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீனப் பெருங்கெண்டை மீன் வகைகளான வெள்ளி கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை, திலேப்பியா போன்ற மீன் வகைகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன் வளர்ப்பு பணி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்க்கவும், விற்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் முழுவதுமாக தடை செய்யப்பட்டு உள்ளது.

ஏன் எனில் இவ்வகை மீன்கள், மற்ற மீன்களையும், நீர்வாழ் உயிரினங்களையும் அதிதீவிரமாக இரையாக உண்ணக்கூடியது. மேலும் நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும், அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்து விடும் தன்மை கொண்டது ஆகும். எனவே ஆப்பிரிக்க ரக மீன்களை வளர்த்தால் நீர் நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழிய வாய்ப்பு உள்ளது.

அதோடு இந்த மீன்கள் காற்றில் உள்ள பிராணவாயுவை சுவாசிக்கும் தன்மையும் மற்றும் மிக குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையும் உடையது. இந்த ரக மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் செய்து அவற்றின் மரபியலை சிதைத்து பல்பெருக்கமடையும் வல்லமையுடையது.

மேலும் மழை மற்றும் பெருவெள்ள காலங்களில் இம்மீன் இனங்கள் வளர்க்கப்படும் குளங்களில் இருந்து தப்பி வெளியேற வாய்ப்பு உள்ளது. தப்பித்து செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர் நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து ஒரு கால கட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை தவிர பிற இன மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளினால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை குமரி மாவட்டத்தில் வளர்க்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இதை மீறி யாரேனும் அந்த ரக மீன்களை வளர்ப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் அம்மீன்களை முற்றிலும் அழித்திட வேண்டி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களும் இவ்வகை மீன்களை கொள்முதல் செய்திட வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story