நெல்லிக்குப்பம் பகுதியில், மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 15 பேர் கைது


நெல்லிக்குப்பம் பகுதியில், மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 15 பேர் கைது
x
தினத்தந்தி 21 March 2019 10:45 PM GMT (Updated: 21 March 2019 6:13 PM GMT)

நெல்லிக்குப்பம் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் பகுதியில் திருவந்திபுரம், ஓட்டேரி, பாலூர் உள்ளிட்ட பகுதியில் கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரை உஷார்படுத்தினார். அதன்படி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஓட்டேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக 17 மாட்டுவண்டிகள் அணிவகுத்து வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அந்த வண்டிகளை மடக்கி பிடிக்க முற்பட்டனர். போலீசாரை பார்த்தவுடன் மாட்டு வண்டிகளை ஓட்டிவந்தவர்கள் தப்பி ஓடினர். இதில் சுதாரித்த போலீசார் அவர்களில் 13 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த குமார், முத்துலிங்கம், பாலகிருஷ்ணன், தணிகாசலம், கவுதமன், சுப்பிரமணி, வீரன், சபரிநாதன், கேசவன், அங்கப்பன், மாயவன், புண்ணியமூர்த்தி, வீரப்பன் ஆகிய 13 பேர் என்பதும், அவர்கள் கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 13 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 17 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதே போல் நடுவீரப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story