கள்ளக்காதலுக்கு இடையூறு, மகளை கொலை செய்த தாய் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறு, மகளை கொலை செய்த தாய் கைது
x
தினத்தந்தி 21 March 2019 11:00 PM GMT (Updated: 21 March 2019 7:06 PM GMT)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கோடப்பமந்து அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன்(வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி ராஜலட்சுமி(35). இவர்களது மகள் உஷாராணி(11). இவள் ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பள்ளியில் ராஜலட்சுமி சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த ஜெகநாதன், காந்தலில் தனியாக வசிக்க தொடங்கினார். இதனால் ராஜலட்சுமி தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இதற்கிடையில் ராஜலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இருப்பினும் ராஜலட்சுமிக்கு மேலும் சிலருடன் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப் படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மகள் உஷாராணி ஊஞ்சல் விளையாடியபோது, கயிறு கழுத்தை இறுக்கியதால் உயிரிழந்து விட்டதாக ராஜலட்சுமி அக்கம்பக்கத்தினரிடம் கூறி கதறி அழுதார். மேலும் தனது மகளின் உடலை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரே தூக்கி சென்றார். அப்போது டாக்டர்கள் உஷாராணி உயிரிழந்ததை உறுதி செய்து, பிரேத பரிசோதனை செய்ய உடலை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஜெகநாதனின் சகோதரர் குமார் உஷாராணியின் சாவில் மர்மம் இருப்பதாக ஊட்டி நகர மத்திய போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது மகளை ராஜலட்சுமியே துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும், அதனை மூடி மறைக்க நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை கோவை சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story