காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து பட்டதாரி வாலிபர் கைது


காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து பட்டதாரி வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 March 2019 10:15 PM GMT (Updated: 21 March 2019 7:14 PM GMT)

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளிடம் டோல்கேட்,

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராஜீ என்பவருடைய மகன் மனீஸ்(வயது 25). பட்டதாரியான இவர் தற்போது வாத்தலை அருகே உள்ள சிறுகாம்பூர் காவல்காரத்தெருவில் வசிக்கும் தனது பாட்டி வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். மனீஸ், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார்.

இதனை அந்த மாணவி ஏற்க மறுத்ததுடன், மனீசை பலமுறை கண்டித்துள்ளார். இதனால் தன் காதல் கைகூடவில்லை என்று மனீஸ் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று பங்குனி உத்திரம் என்பதால் சிறுகாம்பூரில் உள்ள முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அந்த மாணவி மற்றும் அவருடைய உறவினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் மாணவி வீட்டிற்கு செல்வதற்காக கடைவீதி வழியாக நடந்து சென்றார்.

அப்போது அங்கு காத்துக்கொண்டிருந்த மனீஸ், மாணவியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து பகுதியில் குத்தினார். இதில் அவர் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட மனீஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் திருப்பைஞ்சீலி அருகே உள்ள ஒரு வாழை தோட்டத்தில் பதுங்கியிருந்த மனீசை போலீசார், பொதுமக்கள் உதவியுடன் விரட்டி பிடித்தனர். அவர் மீது, இந்திய தண்டனைச்சட்டம் 294 பி, 307 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். திருச்சியில் மாணவி ஒருவர், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story