காதலியை ஏமாற்றிய வாலிபரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்


காதலியை ஏமாற்றிய வாலிபரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 March 2019 10:15 PM GMT (Updated: 21 March 2019 7:51 PM GMT)

காதலியை ஏமாற்றிய வாலிபரை கைது செய்யக்கோரி காதலியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு வலியுறுத்தினால் தனிமையில் இருந்த வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் மிரட்டுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மல்லிகைபுஞ்சை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் ராஜேஷ் (வயது 27). வாடகை வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு இளம் பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளம்பெண் ராஜேசுக்கு அடிக்கடி பணம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்ய வலியுறுத்திய போது ராஜேஷ் மற்றும் அவரது தந்தை செல்வம், தாய் பாப்பா ஆகியோர் மறுத்துள்ளனர். இதனால் அந்த பெண் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் செல்வம், பாப்பா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தப்பி ஓடிய ராஜேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

தன்னை காதலித்து ஏமாற்றிய ராஜேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகி உள்ளதை அறிந்த இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ராஜேசை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறி பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேசை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் வடகாடு போலீஸ் நிலையத்தில் அந்த பெண் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில், தன்னை 5 ஆண்டுகளாக காதலித்த ராஜேஷ் பணம் தேவைப்படும் போது எல்லாம் வாங்குவார். இப்படி ரூ.2 லட்சம் வரை வாங்கிக் கொண்டு, தனிமையில் இருக்கும் போது சில வீடியோக்கள், போட்டோக்களும் எடுத்து வைத்துள்ளார். தற்போது என்னை திருமணம் செய்ய வலியுறுத்தி ராஜேஷ் வீட்டிற்கு சென்ற போது என்னை தாக்கியதுடன் அந்த வீடியோக்களை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டுகிறார் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story