உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை 25-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு


உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை 25-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 21 March 2019 10:45 PM GMT (Updated: 21 March 2019 8:03 PM GMT)

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வருகிற 25-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சிவராசு உத்தரவிட்டு உள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் கடந்த 14-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, துறையூர், மணப்பாறை, துவாக்குடி ஆகிய 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,437 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ஊரகம் மற்றும் நகர்ப்புற அலுவலர்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை ஆய்வு செய்தும், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனைகள் வரும்பட்சத்தில் அக்குறைபாடுகளை சரிசெய்து, நிறைவு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான தொடர்புபடுத்தும் பட்டியல்களை வருகிற 25-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

வாக்குச்சாவடி மையங்களில் பட்டியல்களை தயாரிக்கும்போது வாக்குச்சாவடி மையம், தனியார் கட்டிடத்தில் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அக்கட்டிடம் அரசியல் பிரமுகர்களுக்கு சொந்தமான உள்ளாட்சி அமைப்புகளின் வேட்பாளர் அல்லது அவர்களின் உறவினர்களுக்கு சொந்தமான கட்டிடமாக இருக்கக்கூடாது. கட்டிடத்தின் உறுதி மற்றும் அடிப்படை வசதிகளை ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும். மத உணர்வுகளை தூண்டும் விதமான இடங்களில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்கக்கூடாது. கடந்த 2011 தேர்தல்களை அடிப்படையாக கொண்டும் தற்போதைய சூழலினை கவனத்தில் கொண்டும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து ஊரக மற்றும் நகர்ப்புற அலுவலர்கள் அறிக்கை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாஸ்கரன்(தேர்தல்), லதா(வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) தண்டபாணி, அனைத்து தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story