இலங்கையில் விடுதலையான மீனவர்கள் பாம்பன் திரும்பினர்


இலங்கையில் விடுதலையான மீனவர்கள் பாம்பன் திரும்பினர்
x
தினத்தந்தி 22 March 2019 11:00 PM GMT (Updated: 22 March 2019 10:20 PM GMT)

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பாம்பனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராமேசுவரம்,

கடந்த பிப்ரவரி 21-ந்தேதி மண்டபத்தை சேர்ந்த 8 மீனவர்களும், பாம்பனை சேர்ந்த 5 மீனவர்களும் என 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதேபோல ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 5 மீனவர்களும், நம்புதாளையை சேர்ந்த 8 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் கடந்த 8-ந்தேதி விடுதலை செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு மெரிகானா கேம்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இவர்கள் அனைவரும் விமானம் மூலம் நேற்று மதியம் மதுரை வந்து சேர்ந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன்படி மீனவர்கள் கொலம்பஸ், அடைக்கலம், ஜெபமாலை அருள்சகாயம், முருகானந்தம், ஜெயகாந்த் ஆகிய 5 மீனவர்களும் பாம்பன் வந்து சேர்ந்தனர். இதுகுறித்து பாம்பன் மீனவர் கொலம்பஸ் கூறியதாவது:- எங்களது படகு என்ஜின் பழுதாகி நடுக்கடலில் நின்றது. அந்த நேரத்தில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எங்களை சிறைபிடித்து சென்றனர். நாங்கள் எவ்வளவு கூறியும் அவர்கள் கேட்கவில்லை. எங்களை அடித்து துன்புறுத்தினர்.

சாப்பாடு முறையாக வழங்கவில்லை. சிறையில் எந்த வசதியும் இல்லை. அங்கு குறைவான சாப்பாடு அளித்தனர். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் சிரமப்பட்டோம்.

கடவுள் அருளால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டு இங்கு வந்து சேர்ந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மீனவர்களை உறவினர் ரூபன், மீன்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் மதுரை சென்று அழைத்து வந்தனர்.

Related Tags :
Next Story