தஞ்சை-திருச்சி இடையே மின்பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் இன்னும் 20 நாட்களில் பயன்பாட்டிற்கு வருகிறது


தஞ்சை-திருச்சி இடையே மின்பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் இன்னும் 20 நாட்களில் பயன்பாட்டிற்கு வருகிறது
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 6:43 PM GMT)

தஞ்சை-திருச்சி மின்சார ரெயில் பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். இன்னும் 20 நாட்களில் இந்த சேவை பயன்பாட்டிற்கு வருகிறது.

தஞ்சாவூர்,

திருச்சி-காரைக்கால் இடையே தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக மின் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சியில் இருந்து தஞ்சை வரை ஒரு கட்டமாகவும், தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை ஒரு கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த வழித்தடத்தில் 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக தஞ்சை, திருவாரூர், காரைக்கால் ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மொத்த தூரம் 153 கி.மீ. ஆகும். இதில் தஞ்சை-திருச்சி இடையே 50 கிலோ மீட்டர் தூரம் முதல் கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது முடிவடைந்து விட்டது. இந்த வழித்தடத்தில் இரட்டை ரெயில்பாதை என்பதால் இருவழியிலும் மின்வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2,900 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. முதலில் திருச்சி பொன்மலையில் இருந்து ஆலக்குடி வரையும், பின்னர் ஆலக்குடியில் இருந்து தஞ்சை வரையும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து தஞ்சை- திருச்சி இடையே நேற்று சோதனை முறையில் மின்சார ரெயில் இயக்கப்பட்டது. தஞ்சையில் உள்ள துணை மின் நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் திருச்சி பொன்மலையில் உள்ள துணை மின் நிலையத்தின் மூலம் ரெயில் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரெயில் சோதனை ஓட்டம் தஞ்சையில் இருந்து நேற்று மாலை 3.35 மணிக்கு தொடங்கியது. 8 பெட்டிகள் கொண்ட ரெயில், சோதனை முறையில் இயக்கப்பட்டது. தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் இதனை இயக்கி பார்த்து ஆய்வு செய்தார். அவருடன் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார், கோட்ட முதன்மை ஆபரேட்டிங் மேலாளர் பிரசன்னா மற்றும் ரெயில்வே துணை பாதுகாப்பு ஆணையர், கூடுதல் கோட்ட மேலாளர்கள், தஞ்சை ரெயில் நிலைய மேலாளர் ராஜசேகர் ஆகியோரும் உடன் சென்றனர்.

முன்னதாக ரெயில்வே அதிகாரிகள் திருச்சியில் இருந்து டீசல் என்ஜின் ரெயிலில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் திருச்சி-தஞ்சை வழித்தடத்தில் உள்ள ரெயில்வே பாலங்கள், ரெயில் நிலையங்கள், சிக்னல்கள், ரெயில் நிலையத்தில் உள்ள கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தபடி தஞ்சை வந்தனர். பின்னர் மின்சார ரெயில் என்ஜின் வரவழைக்கப்பட்டு தஞ்சையில் இருந்து சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக பூஜைகள் செய்யப்பட்டு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் தஞ்சையில் இருந்து 35 நிமிடத்தில் திருச்சி சென்றது. தஞ்சையில் உள்ள துணை மின் நிலையம் இன்னும் 15 அல்லது 20 நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு வரும். அதன் பின்னர் தஞ்சை வரை மின்சார ரெயில் இயக்கம் பயன்பாட்டுக்கு வரும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோதனை ஓட்டத்தையொட்டி திருச்சி-தஞ்சை இடையே இரட்டை வழி அகல ரெயில் பாதையில் நேற்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை பொதுமக்கள் யாரும் ரெயில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story