கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாயாரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் மாமியார் உள்பட 5 பேர் மீது வழக்கு


கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாயாரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் மாமியார் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 March 2019 10:15 PM GMT (Updated: 24 March 2019 3:35 PM GMT)

கன்னியாகுமரியில் கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாயாரிடம் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, மாமியார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய கெபின்ராஜ் (வயது 33), மீனவர். இவருடைய மனைவி சகாய சிந்துஜா. இவர்களுடைய மகன் ரெய்னா(4). கடந்த 17–ந்தேதி காலை வீட்டு முன் விளையாடி கொண்டிருந்த ரெய்னா திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த சகாய சிந்துஜா, அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, சிறுவனின் தாத்தாவான அந்தோணிசாமி அழைத்து சென்றது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தி அந்தோணிசாமியை கேரள மாநிலம் பாலக்காட்டில் பிடித்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் ரூ.58 ஆயிரம் கடனுக்காக ரெய்னாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்தோணிசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் சகாய சிந்துஜா கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– அந்தோணிசாமியிடம் வாங்கிய பணத்திற்காக அவரும், அவருடைய சகோதரியும் எனது மாமியாருமான மேரியம்மச்சி, ஆன்டணி, சேவியர் உள்பட 5 பேர் சேர்ந்து என்னை கடத்திச் சென்று தலைமுடியை அறுத்து சித்ரவதை செய்து, கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் பேரில் மாமியார் மேரியம்மச்சி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்டணி, சேவியர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் அந்தோணிசாமி ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளதால், மேரியம்மச்சி உள்ளிட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story