திருவாரூரில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்க - விற்க தடை கலெக்டர் தகவல்


திருவாரூரில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்க - விற்க தடை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 March 2019 10:45 PM GMT (Updated: 24 March 2019 6:48 PM GMT)

திருவாரூரில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வதற்கு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்து பிரதான தொழிலாக உள்நாட்டு மீன் வளர்ப்பு உள்ளது. உள்நாட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு, மிர்்கால் மற்றும் சீன பெருங்கெண்டை மீன் வகைகளான வெள்ளிக்கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை மற்றும் மரபியல் மேம்படுத்தப்பட்ட வளர்ப்பு திலேப்பியா, கொடுவா மீன் குஞ்சுகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன் வளர்ப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மீன் இனங்கள், மற்ற மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை இரையாக உண்ணும் தன்மை உடையதால் நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்்ப்பு மீன்களையும், அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்து விடும். நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்்வாழ் உயிரினங்களும் அழியும் வாய்ப்புள்ளது.

மேலும் இந்த மீன் இனங்கள் காற்றில் உள்ள பிராணவாயுவை சுவாசிக்கும் தன்மையும் மற்றும் மிகக் குறைந்த ஆழமுள்ள நீர் நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையது. இந்த மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு அவற்றின் மரபியலை சிதைத்து ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் பெருக்கமடைய வாய்ப்புள்ளது.

அத்துடன் மழை மற்றும் பெரு வெள்ள காலங்களில் இந்த மீன் இனங்கள் வளர்ப்பு செய்யும் குளங்களில் இருந்து வெளியேறி, உள்நாட்டு நீர்நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து பெருக்கமடையும். ஒரு கால கட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை தவிர பிற மீன்கள் இல்லாமல், உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.

எனவே, இந்த மீன்களை வளர்ப்பு செய்வது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் ஏதேனும் வந்தால், அந்த மீன்களை முற்றிலும் அழிக்க வேண்டி அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் இவ்வகை மீன்களை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story