முன்பதிவு ரெயில் பயணம் தொடங்கும் இடத்தை 4 மணி நேரத்திற்கு முன்பு மாற்றுவதற்கு வாய்ப்பு 2 மாதங்களில் அமலுக்கு வரும் என தகவல்


முன்பதிவு ரெயில் பயணம் தொடங்கும் இடத்தை 4 மணி நேரத்திற்கு முன்பு மாற்றுவதற்கு வாய்ப்பு 2 மாதங்களில் அமலுக்கு வரும் என தகவல்
x
தினத்தந்தி 24 March 2019 10:45 PM GMT (Updated: 24 March 2019 8:24 PM GMT)

முன்பதிவு செய்து ரெயில் பயணம் செய்வோர் கடைசி நேரத்தில் தங்கள் ரெயில் பயணம் தொடங்கும் ரெயில் நிலையத்தை மாற்றுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வரை வாய்ப்பு அளிக்கும் நிலையில் விதிமுறைகள் மாற்றப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விருதுநகர்,

நெடுந்தூர ரெயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்வோர் கடைசி நேரத்தில் திடீரென தங்கள் ரெயில் பயணம் தொடங்கும் ரெயில் நிலையத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் தற்போதுள்ள நிலையில் அவர்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் ஏறும் ரெயில் நிலையத்தை மாற்றிக்கொள்ளலாம்.

இதற்கு அவர்கள் ரெயில்நிலைய அதிகாரியிடம் நேரில் சென்றோ அல்லது ஆன்லைன் மூலம் ரெயில்வே வணிகபிரிவிடம் தொடர்பு கொண்டுதான் இம்மாற்றத்தை செய்ய முடியும்.

இந்தநிலையில் ரெயில்வே நிர்வாகம் பயணம் தொடங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக தாங்கள் ஏற வேண்டிய ரெயில்நிலையத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு தரும் புதிய நடைமுறை அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி 139 என்ற டெலிபோன் எண்ணை தொடர்பு கொண்டு பயணம் தொடங்கும் ரெயில் நிலையத்தை மாற்றிக்கொள்ளலாம் அல்லது ரெயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு நேரில் சென்றும் இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து ஏற வேண்டிய ரெயில் நிலையத்தை மாற்றிக்கொள்ளலாம்.

ரெயில் பயணம் தொடங்கும் 4 மணி நேரத்திற்கு முன்பு வரை இந்த மாற்றத்தை செய்ய வாய்ப்பு தரப்படும். அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.


Next Story