என்.ஆர்.காங்கிரஸ் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி நாராயணசாமி தாக்கு


என்.ஆர்.காங்கிரஸ் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி நாராயணசாமி தாக்கு
x
தினத்தந்தி 24 March 2019 11:45 PM GMT (Updated: 24 March 2019 9:00 PM GMT)

இந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும் என்று நாராயணசாமி கடுமையாக தாக்கி பேசினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இந்த நிலையில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

புதுவை காலாப்பட்டு அருகே உள்ள கனகசெட்டிக்குளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி பிரசாரத்தை தொடங்கினார்கள். இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, வேட்பாளர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, சிவா (தி.மு.க.) மற்றும் ஆதரவாளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

கனகசெட்டிகுளத்தில் முதல்–அமைச்சர் நாராணசாமி பேசியதாவது:–

கடந்த தேர்தலில் வேலைவாய்ப்பு, விவசாய பொருட்களுக்கு இரட்டிப்பு விலை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நரேந்திரமோடி அளித்தார். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அவருடைய ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா தென்மாநிலங்களில் உள்ள 135 நாடாளுமன்ற தொகுதியில், 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது.

சத்தீஷ்கர், மத்திய பிரசேதம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். பஞ்சாப், அரியானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நம்முடைய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதாக கூறி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் அ.தி.மு.கவை கூட்டணியில் இருந்து விலகினார். இந்தநிலையில் அ.தி.மு.க., பாரதீய ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து உள்ளார். இக்கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும்.

என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை ரங்கசாமி அடிமையாக வைத்திருக்கிறார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத டாக்டர் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஆனால் நமது வேட்பாளர் வைத்திலிங்கம், அரசியல் பாரம்பரியம் கொண்டவர். எம்.எல்.ஏ., எதிர்கட்சி தலைவர், சபாநாயகர், முதல்–அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். தகுதி வாய்ந்த நபரை அனுப்பினால் தான் புதுச்சேரிக்கு மாநிலத்திற்கான திட்டங்களை பெற முடியும்.

நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவுக்கும், புதுச்சேரிக்கும் ஒரு விடிவு காலத்தை கொடுக்கும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும். காங்கிரஸ் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரசாரம் கனகசெட்டிக்குளத்தில் தொடங்கி காலாப்பட்டு, லாஸ்பேட்டை சிவாஜி சிலை, அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.


Next Story