சேலம் அருகே பறக்கும்படையினர் வாகன சோதனை: புஷ்பவனம் குப்புசாமியிடம் ரூ.57 ஆயிரம் பறிமுதல்


சேலம் அருகே பறக்கும்படையினர் வாகன சோதனை: புஷ்பவனம் குப்புசாமியிடம் ரூ.57 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 March 2019 11:00 PM GMT (Updated: 25 March 2019 6:06 PM GMT)

சேலம் அருகே பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் புஷ்பவனம் குப்புசாமியிடம் இருந்து ரூ.57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜலகண்டாபுரம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆணவங்கள் இன்றி கொண்டு சென்றால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சேலம் அருகே உள்ள ஜலகண்டாபுரத்தில் வன்னியமகாராஜா கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி இரவு ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி- அனிதா குப்புசாமி ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புஷ்பவனம் குப்புசாமி, அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர் ஒரு காரில் சேலம் நோக்கி புறப்பட்டனர். அப்போது ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த புஷ்பவனம் குப்புசாமியின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.57 ஆயிரம் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் பணம் எப்படி கிடைத்தது? அதற்கான ஆவணத்தை காட்டுங்கள் என்று கேட்டனர். அதற்கு புஷ்பவனம் குப்புசாமி, ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் ரூ.57 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதனால் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நாங்கள் சோதனை செய்கிறோம். எங்களது கடமையை செய்ய விடுங்கள், ஆவணத்தை காட்டுங்கள், பணத்தை பெற்றுச்செல்லுங்கள் என்று தெரிவித்தனர்.

இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த நிர்வாகிகள் அந்த பணத்துக்கான ஆவணத்தை கொடுத்தனர். அதன் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.57 ஆயிரத்தை திரும்ப ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story