வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி


வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி
x
தினத்தந்தி 25 March 2019 10:45 PM GMT (Updated: 25 March 2019 9:06 PM GMT)

வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.

குளித்தலை,

தென்கரை, கட்டளை மேட்டு வாய்க்கால்களுக்கு முறைவைத்து நீர்ப்பாசனம் தருவதாக கூறி, பின்னர் அதை நடைமுறை படுத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65 அடி உள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மழை இல்லாத காரணத்தால் தென்னை போன்ற விவசாய பயிர்கள் கருக தொடங்கிவிட்டது. எனவே தமிழக அரசு மணல் அள்ளுவதை தடை செய்யவேண்டும். தமிழக முதல்-அமைச்சர் தனது தொகுதிக்கு மேட்டூர் அணையின் தண்ணீரை வைத்து கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 10 ஆயிரம் ஏக்கருக்கு முறையற்ற பாசனம் நடத்த திட்டம் தீட்டியுள்ளார். முறையற்ற முறையில் பாசனம் நடத்தும் முதல்-அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற இயக்க நிறுவனர் மருதூர் சண்முகம் தலைமையில் குளித்தலை பெரிய பாலத்தில் உள்ள ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்திருந்தனர்.

அதன்பேரில் மருதூர் சண்முகம் தலைமையில் நேற்று விவசாயிகள் பலர் உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். இதையடுத்து அப்போது அங்கு வந்த ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் மாயனூர் தடுப்பணைக்கு போதிய அளவு தண்ணீர் மட்டம் உயர்ந்த பின்னர் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமென அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் தங்கள் கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு கூறப்பட்டது. பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் அளித்த விவசாயிகள், இன்னும் 3 நாட்களுக்குள் வாய்க்காலில் தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். அதன்பின்னரும் தண்ணீர் திறக்கபடவில்லையெனில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் எனக்கூறிவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story