பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் மனு நிராகரிப்பு


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் மனு நிராகரிப்பு
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 7:47 PM GMT)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப் பட்டது. வேட்பாளரின் ஆவணங்கள் முறையாக இல்லையென்று தேர்தல் அதிகாரி சாந்தா வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அருள்பிரகாசம் போட்டியிடு வார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அருள் பிரகாசத்தின் பூர்வீகம் பெரம்பலூர் மாவட்டம் ஆனாலும், சென்னையில் அவர் வசிப்பதால் பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பது கடினம் என்று கட்சியின் நிர்வாகிகள் கமல்ஹாசனிடம் கூறியதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திடீரென்று வேட்பாளர் அருள்பிரகாசம் மாற்றப் பட்டார். அவருக்கு பதிலாக பெரம்பலூரை சேர்ந்த தொழிலதிபரும், பெரம்பலூர் முன்னாள் நகராட்சி மன்ற தலைவருமான இளையராஜா வின் அண்ணனான செந்தில்குமார் (வயது 44) வேட்பாளராக அறிவிக்கப் பட்டார்.

நேற்று வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் என்பதால் நேற்று காலை 10.30 மணியளவில் தான் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் செந்தில்குமாருக்காக, அவரது கட்சியினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனுவினை வாங்கி சென்றனர். வேட்பு மனுவினை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். ஆனால் பிற்பகல் 2.45 மணி வரை மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்திற்கு வர வில்லை.

2.50 மணியளவில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்காரர்கள் 2 பேர் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, வேட்பாளர் செந்தில்குமார் சில வினாடியில் வந்து விடுவார் எனவே வேட்பு மனு தாக்கல் செய்ய சிறிது நேரம் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்றனர். அதற்கு தேர்தல் அதிகாரிகள் அனுமதித்ததாக தெரிகிறது. ஆனால் வேட்பாளர் செந்தில்குமார் மாலை 3 மணிக்கு பிறகு தான் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் முடிந்து விட்டது என்று கூறி, அவரை உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இதனால் வேட்பாளர், அவருடன் வந்திருந்த கட்சியினர் போலீசாரிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தா உடனடியாக வேட்பாளரை உள்ளே அனுமதிக்குமாறு போலீ சாருக்கு உத்தர விட்டார். அதனை தொடர்ந்து உள்ளே சென்ற வேட்பாளர் செந்தில் குமார் வேட்பு மனுதாக்கல் செய்ய தனது ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தா, சரியான நேரத்துக்கு வராததாலும், வேட்பாளரின் ஆவணங்கள் முறையாக இல்லை என்றும் கூறி செந்தில்குமாரிடம் வேட்பு மனுவினை வாங்க மறுத்து, அதனை நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து வெளியே வந்த வேட்பாளர் செந்தில் குமார் மற்றும் அவரது கட்சியினர் இதுகுறித்து கூறுகையில், வேட்பு மனுதாக்கல் செய்ய சரியான நேரத்திற்கு நாங்கள் வந்து விட்டோம். வேட்பாளர் வர சில வினாடி தாமதம் ஏற்பட்ட தாலும், அப்போது அவரை கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே அனுப்ப போலீசார் அனுமதிக்காததால் கூடுதல் தாமதம் ஏற்பட்டது. மேலும் வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரி வாங்கி பார்க்காம லேயே முறையான ஆவணங் கள் இல்லை என்று வேட்பு மனுவினை நிராகரித்து விட்டார். வேட்பு மனுவினை வாங்காமல் நிராகரித்ததற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு முட்டை வழங்குவதில் நடந்த முறை கேட்டினை மக்கள் நீதி மய்யம் அம்பலப்படுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ? அதன்படி நடப்போம் என்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரின் மனு ஏற்கப்படாததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story