எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது: விசைப்படகு மீனவருக்கு 2 ஆண்டு சிறை இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது: விசைப்படகு மீனவருக்கு 2 ஆண்டு சிறை இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 26 March 2019 10:15 PM GMT (Updated: 26 March 2019 8:01 PM GMT)

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த மாதம் 20-ந்தேதி அன்று விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற பிரவீன் (வயது 42), தாமோதரன் (32), சிங்கராஜ் (25), அப்துல் ராவுத்தர் (30), குமார் (30) ஆகிய 5 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை அழைத்து சென்றனர். இந்த வழக்கு இலங்கையில் உள்ள ஊர் காவல்படை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அதில் 4 மீனவர்களை மட்டும் இலங்கை நீதிமன்றம் கடந்த 6-ந்தேதி அன்று விடுதலை செய்தது.

ஆனால் அந்த படகில் சென்ற மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்த அப்துல் ராவுத்தர் என்பவரை மட்டும் விடுதலை செய்யவில்லை. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அவரை மட்டும் விடுதலை செய்யாமல் இருப்பதன் காரணம் என்னவென்று தெரியாமல் மீனவர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அப்துல் ராவுத்தர் என்பவர் ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கடந்த முறை நீதிமன்றம் எச்சரிக்கை செய்து அனுப்பியிருந்தது.

இந்நிலையில் தான் அவர் 3-வது தடவையாக சிறைபிடிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து இலங்கை நீதிமன்றம் அப்துல் ராவுத்தருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு சம்பந்தமாக இந்திய உயர் ஆணையம் மற்றும் தமிழக மீன்வளத்துறை சார்பாக மீனவருக்கு விதித்த தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை இலங்கை நீதிமன்றம் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழக மீனவர் அப்துல் ராவுத்தர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஜெகதாப்பட்டினம் மீனவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம், மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story