கன்னியாகுமரி தொகுதியில், கடைசி நாளில் அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 18 பேர் வேட்பு மனு தாக்கல்


கன்னியாகுமரி தொகுதியில், கடைசி நாளில் அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 18 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 8:56 PM GMT)

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில், கடைசி நாளில் அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 19-ந் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. கடைசி நாளான நேற்று அ.ம.மு.க. வேட்பாளர் லட்சுமணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் கே.டி.பச்சைமால் (கிழக்கு), ஜெங்கின்ஸ் (மேற்கு), முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நேற்று பா.ஜனதா கட்சி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மாற்று வேட்பாளராக கழுவன்தட்டுவிளை பகுதியை சேர்ந்த பொன்.ரத்தினமணி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (ரெட் ஸ்டார்) கட்சி மாவட்ட செயலாளர் காரன்விளை சி.எம்.பால்ராஜ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் மூலக்கரைபட்டி இ.பாலசுப்பிரமணியன், சுயேச்சைகளாக அ.ம.மு.க. மாற்று வேட்பாளராக அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெங்கின்ஸ் (53), நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.ஜெயின்றீன் (41), மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜே.எபினேசர், வருங்கால இந்தியா கட்சி சார்பில் நாகர்கோவில் கணேசபுரம் டி.சுபி, நாகர்கோவில் வடசேரி நாகூர் மீரான் பீர்முகமது, பாகோடு நல்லான்விளை ஈனோஸ், வெள்ளமடம் கே.முருகன், கோட்டார் வடக்கு ரத வீதி இ.பேச்சிமுத்து, பள்ளியாடி கிழவாரவிளை வி.டென்னிசன், கோட்டார் என்.இசக்கிமுத்து, இரவிபுதூர் பத்மநாபன் புதூர் மகேஷ், மூலச்சல் புத்தாழவிளை டி.ரவிக்குமார், நாகர்கோவில் வடசேரி எல்.வசந்தகுமார், மருதங்கோடு நடுத்தேரிவிளை ஜான் அருள் (42) ஆகிய 17 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நேற்று கடைசி நாளாக இருந்ததால் மதியம் 2 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர். பிற்பகல் 3 மணியை நெருங்கும்போது பலர் மனு தாக்கல் செய்ய காத்திருந்தனர். எனவே 2.50 மணி அளவில் அவர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி டோக்கன் கொடுத்தார்.

டோக்கன் எண் வரிசைப்படி கலெக்டரிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் வேட்பு மனு தாக்கலின் கடைசி நேரத்தில் பரபரப்பு காணப்பட்டது. நேற்று 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் 30 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

Next Story