உடுமலை வனப்பகுதியில் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் காட்டுத்தீயை அணைத்த வனத்துறையினர் வெப்பம் தாங்காமல் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்த வனவிலங்குகள்


உடுமலை வனப்பகுதியில் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் காட்டுத்தீயை அணைத்த வனத்துறையினர் வெப்பம் தாங்காமல் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்த வனவிலங்குகள்
x
தினத்தந்தி 27 March 2019 10:45 PM GMT (Updated: 27 March 2019 4:58 PM GMT)

உடுமலை வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீயை பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் வனத்துறையினர் அணைத்தனர். மேலும் தீப்பிடித்து எரிந்த பகுதியில் வெப்பம் தாங்காமல் அங்கு வசித்து வந்த வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன.

தளி,

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. வனப்பகுதியை ஆதாரமாக கொண்டு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அது தவிர கோடந்தூர், ஆட்டுமலை, ஈசல்தட்டு, கரட்டுபதி, தளிஞ்சி, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் ஈட்டி, சந்தனம், புங்கன், வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்கள் வளர்ந்து உள்ளன. வனப்பகுதியின் பசுமைக்கும் வனவிலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்கும் மழைப்பொழிவு அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை ஓரளவிற்கு பெய்தது. இதனால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியதுடன் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தாராளமாக கிடைத்து வந்தது.

ஆனால் மேற்கு தொடர்ச்சிமலையில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் கோடை காலத்திற்கு முன்பாகவே வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. புற்கள் மற்றும் செடிகள் முற்றிலுமாக காய்ந்து விட்டன. இங்கு எளிதில் காட்டுத்தீ பரவுவதற்கான சூழல் நிலவி வந்தது. இதையடுத்து வனத்துறையினர் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் உடுமலை மற்றும் அமராவதி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சூழலில் கடந்த 24-ந் தேதி உடுமலை வனப்பகுதி ஈசல்தட்டு கிழக்கு பீட் கோட்டமலை மற்றும் ஆட்டுமலை பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றிக் கொண்டது. இது குறித்த தகவலை அங்குள்ள மலைவாழ் மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். அதன் பேரில் உடுமலை வனத்துறையினர் வனச்சரக அலுவலர் தனபால் தலைமையில் கோட்டமலை பகுதிக்கு சென்று தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வனப்பகுதியில் காற்றோட்டம் இருந்ததால் தீயை அணைப்பதில் வனத்துறையினருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ஆனாலும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினரின் தீவிர முயற்சியின் காரணமாக உடுமலை வனப்பகுதியில் பற்றியிருந்த காட்டுத்தீ நேற்று அதிகாலை அணைக்கப்பட்டது. வனத்துறையினருக்கு பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தீயை அணைக்கும் உபகரணங்கள் வழங்கப்படாததால் குச்சிகள் மற்றும் இலைகளுடன் கூடிய மரக்கிளைகளை கொண்டு தீயை அணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வன ஆர்வலர்கள் கூறும்போது “ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வனத்துறையினர் தீயை அணைக்க முயன்றதால் நேரம் வீணானதுடன் வனத்துறையினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே வனத்துறையினருக்கு தீயை அணைக்கும் உபகரணங்கள் வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. அதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றனர்.

மேலும் உடுமலை வனப்பகுதியில் மர்ம நபர்கள் காட்டுத்தீயை உருவாக்கி உள்ளதும் வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் காட்டுத்தீயை ஏற்படுத்திய நபர்களை மலை வாழ் மக்கள் உதவியுடன் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து காட்டுத்தீயை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். காட்டுத்தீயால் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த புற்கள் மற்றும் செடிகள் எரிந்து நாசமாகி உள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த வன விலங்குகள் வெப்பத்தின் காரணமாக வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இந்த தீயால் அந்த பகுதியில் உள்ள மரங்களுக்கு சேதம் ஏற்படவில்லை.

Next Story