தமிழகத்தில், வன்முறை கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் தி.மு.க.வினர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


தமிழகத்தில், வன்முறை கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் தி.மு.க.வினர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 March 2019 11:15 PM GMT (Updated: 28 March 2019 5:40 PM GMT)

தமிழகத்தில், வன்முறை கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் தி.மு.க.வினர் என்று மயிலாடுதுறையில், ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் ஆசைமணிக்கு ஆதரவு திரட்டும் பொதுக்கூட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஒரு கூட்டணியும், தி.மு.க. சார்பில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் தமிழக வளர்ச்சி பற்றியும், தமிழக ஜீவாதார உரிமைகளை காப்பாற்றுவதிலும் முன்னின்று செயல்பட்டு இருக்கிறது என்பதையும் நீங்கள் எல்லோரும் நன்றாக அறிவீர்கள்.


10 ஆண்டுகள் காங்கிரசும், தி.மு.க.வும் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீரை பங்கிடுவதில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினை முதல்–அமைச்சராக கருணாநிதி ஆட்சி புரிந்த 1972–ம் ஆண்டில் இருந்துதான் தொடங்கியது. காவிரி ஆற்று நீரில் கர்நாடகத்திற்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அந்த அளவு உரிமை நமக்கும் இருக்கிறது.

இந்த நீரை தேக்கி வைக்க 1972–ம் ஆண்டு கர்நாடக அரசு 4 அணைகளை கட்டியது. அந்த நேரத்தில் கடும் எதிர்ப்பு தமிழகத்தில் இருந்தது. ஆனால் கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று அணைகள் கட்டுவதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று அங்கு வாக்குமூலமாக கொடுத்து விட்டு வந்து விட்டார். அதனால் வந்த வினை நமக்கு வந்து சேர வேண்டிய ஆற்று நீரின் அளவு குறைந்தது.


இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 17 ஆண்டுகளாக அந்த மன்றம் தீர விசாரணை செய்து 2007–ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. அப்போது ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவர். கருணாநிதி முதல்–அமைச்சர். டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி. தி.மு.க.வை சேர்ந்த 9 பேர் அங்கு மத்தியில் மந்திரிகளாக இருந்தார்கள்.

அப்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை உடனடியாக அரசாணையாக வெளியிடுங்கள் என்று கருணாநிதிக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதற்கு அவர் செவிசாய்க்கவில்லை.


அதன் பின்னர் தமிழகத்தின் முதல்–அமைச்சராக ஜெயலலிதா மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வாதாடி, போராடி, சட்ட போராட்டம் நடத்தி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்தார். ஆட்சி இருந்தும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அதை செய்யவில்லை. 7 ஆண்டுகளாக ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தி காவிரி உரிமையை வாங்கி தந்தார்.

ஆனால் அப்போது முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அதை செய்யவில்லை. இதில் இருந்து மக்களின் தேவைகள், ஜீவாதார உரிமைகளை காப்பதில், யார், எந்த ஆட்சி நடைமுறைப்படுத்துகிறது என்று சொன்னால் ஜெயலலிதாவின் நல்ல அரசுதான் என்பதை நான் இங்கு சுட்டி காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.


2011–ம் ஆண்டு ஜெயலலிதா முதல்–அமைச்சராக பொறுப்பேற்று பல்வேறு நல்ல திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை தந்துள்ளார். 2016–ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 4 கிராமாக இருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்னார். இன்று ஆட்சி செய்து வரும் ஜெயலலிதா அரசு, அதை தலைமை தாங்கி நடத்தி வரும் அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தந்து கொண்டிருக்கிறார்.

2016–ம் ஆண்டை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்கு பின்னால் ஆட்சி செய்த அரசு மீண்டும் தொடர்ந்து ஆட்சி செய்யும் பொறுப்பை சென்ற தேர்தலில் தமிழக மக்கள் தீர்ப்பாக தந்தார்கள். அதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் அரசு தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. இன்றைக்கு ஜெயலலிதா நம்மிடத்தில் இல்லை. இருந்தாலும் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களிலும் போட்டியிட்டு 39 இடங்களிலும் வெற்றி பெற்றோம். எனவே ஆசைமணிக்கு வெற்றி சின்னமாம் இரட்டை இலையில் முத்திரையிட்டு அவருக்கு மகத்தான மாபெரும் வெற்றியை பெற்று தரும்படி வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து அவர், மயிலாடுதுறை வழியாக குத்தாலத்திற்கு புறப்பட்டு சென்றார். குத்தாலம் பஸ் நிலையம் அருகில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–


அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் முதல்–அமைச்சராகவும், கட்சி தலைமை பொறுப்பிற்கும் வர முடியும். ஆனால் தி.மு.க.வில் சாதாரண தொண்டர்கள் முதல்–அமைச்சராக முடியுமா? கட்சி தலைமை பொறுப்பிற்கு வரமுடியுமா? கண்டிப்பாக முடியாது. 2006–2011–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அக்கட்சிகளை சேர்ந்தவர்கள் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து என ஈடுபட்டு அராஜக ஆட்சியை நடத்தினர். ஆனால், அ.தி.மு.க. அமைச்சர்கள், மக்களோடு மக்களாக நின்று மக்களை காப்பாற்றி வருகிறார்கள்.

சுனாமி, புயல் போன்ற காலக்கட்டங்களில் நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் மக்களோடு மக்களாக நின்று களப்பணியாற்றினோம். இப்படிப்பட்ட ஆட்சியை பற்றி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசி வருகிறார். பிரியாணி கடைகளிலும், புரோட்டா கடைகளிலும் சாப்பிட்டுவிட்டு பில் தொகை தராமல் அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் தி.மு.க.வினர். தமிழகத்தில் வன்முறை கலாசாரத்தை அறிமுகப்படுத்தியதே தி.மு.க.வினர் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி உள்பட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story