புதுக்கோட்டையில் லாரி மோதி முதியவர் பலி கல்லூரி மாணவிகள் 2 பேர் காயம்


புதுக்கோட்டையில் லாரி மோதி முதியவர் பலி கல்லூரி மாணவிகள் 2 பேர் காயம்
x
தினத்தந்தி 29 March 2019 11:00 PM GMT (Updated: 29 March 2019 9:44 PM GMT)

புதுக்கோட்டையில் லாரி மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். கல்லூரி மாணவிகள் 2 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டையில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஆலங்குடியை நோக்கி சென்றது. புதுக்கோட்டை பேராங்குளம் பகுதியில் அந்த லாரி சென்றபோது, முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது 2 லாரி களும் உரசிக்கொண்டதாக தெரிகிறது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வைக்கோல் ஏற்றப்பட்ட லாரி, அந்த பகுதியில் சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மற்றும் 2 கல்லூரி மாணவிகள் மீது மோதியது. இதில் முதியவர் படுகாயமடைந்தார். கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கல்லூரி மாணவிகள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், காயமடைந்த கல்லூரி மாணவிகள் புதுக்கோட்டை காந்திநகர் 6-ம் வீதியை சேர்ந்த கணேசன் மகள் விஜயலெட்சுமி(வயது 19), சந்திரன் மகள் சண்முகப்பிரியா(19) என்பதும், இவர்கள் 2 பேரும் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இறந்த முதியவரை பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story