தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலினால் நிறைவேற்ற முடியாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலினால் நிறைவேற்ற முடியாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 31 March 2019 11:00 PM GMT (Updated: 31 March 2019 5:47 PM GMT)

தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலினால் நிறைவேற்ற முடியாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

தர்மபுரி, 

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூடானூர், கும்மனூர், சி.டி.பெட்டம், கொலசனஅள்ளி, கவுண்டனூர், ஏர்ரனஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பிரசார கூட்டங்கள் நடைபெற்றது.

இந்த கூட்டங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், பா.ம.க. மாநில துணைத்தலைவர் பாடி செல்வம், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோபால் வரவேற்றார். இந்த பிரசார கூட்டங்களில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. அரசு மக்களுக்கு மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் அமைய உறுதுணையாக இருப்போம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாத பல திட்டங்களை அந்த கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். அவரால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியாது.

மகாத்மாகாந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை என்பதை மாற்றி 200 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். பாலக்கோடு பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி புதிய நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்ற பொதுமக்களாகிய நாம் தமிழக அரசுக்கு உறு துணையாக இருக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க அமைக்கப்படும் சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Next Story