தேர்தல் செலவு கணக்கு உண்மைக்கு புறம்பாக இருந்தால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை


தேர்தல் செலவு கணக்கு உண்மைக்கு புறம்பாக இருந்தால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 March 2019 10:45 PM GMT (Updated: 31 March 2019 7:16 PM GMT)

தேர்தல் செலவு கணக்கு சரியாக இல்லாமல், உண்மைக்கு புறம்பாக இருந்தால் வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப்படுவார் என்று வேட்பாளர்கள், முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர், 

வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. காவல் பார்வையாளர் குரிந்தர் சிங்திலான், பொது பார்வையாளர்கள் ரவி டபாரியா (வேலூர்), ஸ்ரீநிவாஸ் ஸ்ரீநரேஷ் (அரக்கோணம்), தேர்தல் செலவின பார்வையாளர்கள் உஜ்வால் குமார் (வேலூர்), யாதுவீர்சிங், ஹரிஷ்குமார் (அரக்கோணம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ரூ.70 லட்சமும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ரூ.28 லட்சமும் அதிகபட்ச செலவினமாக இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் அல்லது முகவர் அல்லது கூட்டாக தேர்தல் செலவினத்திற்காக தனியாக ஒரு வங்கி கணக்கு வைத்து செலவினத்தை பராமரிக்க வேண்டும்.

பராமரிக்கப்படும் தேர்தல் செலவின கணக்குகளை அதற்கான ரசீதுகள், பதிவேடுகள், வங்கி கணக்கு அறிக்கை மற்றும் அனுமதி தொடர்பான ஆவணங்களுடன் உரியபடிவங்களில் தேர்தல் செலவின பார்வையாளரின் ஆய்வுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கும் நாளில் தாக்கல் செய்யவேண்டும். நட்சத்திர பேச்சாளர்கள், கட்சி தலைவர்கள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது வேட்பாளர் அல்லது அவருடைய முகவர் மேடையில் தோன்றினால், நட்சத்திர பேச்சாளர், கட்சி தலைவர் பயணச்செலவு நீங்கலாக ஊர்வலம், பொதுக்கூட்ட முழுச்செலவும் வேட்பாளர் தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

ஒரு வேட்பாளர் ரூ.10 ஆயிரத்துக்குமேல் ரொக்கமாக தேர்தல் செலவினம் மற்றும் நன்கொடை பெறக்கூடாது. ரூ.10 ஆயிரத்துக்குமேல் பெறப்படும் தொகை காசோலை, வரைவோலை மற்றும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பெறவேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் முழுமையான தேர்தல் செலவு கணக்கினை மாவட்ட தேர்தல் அலுவலரிடம், வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் செலவின தொகையை மீறி செலவு செய்தால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி குற்றச்செயலாக கருதப்படும். வேட்பாளர் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாமல் இருந்தாலும், தாக்கல் செய்த செலவுகணக்கு சரியாக இல்லாமல், உண்மைக்கு புறம்பாக இருந்தாலும் வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப்படுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், (கணக்கு) சிலுப்பன் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story