வெள்ளிச்சந்தை அருகே கோவில் உண்டியல் பணத்தை திருடியவர் பிடிபட்டார்


வெள்ளிச்சந்தை அருகே கோவில் உண்டியல் பணத்தை திருடியவர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 31 March 2019 10:45 PM GMT (Updated: 31 March 2019 8:44 PM GMT)

வெள்ளிச்சந்தை அருகே கோவில் உண்டியல் பணத்தை திருடியவர் பிடிபட்டார்.

ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் ஊசிக்காட்டு சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் தங்க சுந்தரம் பூசாரியாக உள்ளார். இங்கு தினமும் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். சம்பவத்தன்று வழக்கமான பூஜைகளை முடித்து விட்டு தங்க சுந்தரம் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

மறுநாள் அதிகாலையில் அதே ஊரைச்சேர்ந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் கோவில் வழியாக சென்றனர். அப்போது கோவிலில் இருந்து சத்தம் வந்தது. உடனே, அங்கு சென்று பார்த்தபோது, ஒருவர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எண்ணி சட்டை பையில் வைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர். இதுபற்றி வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம், கோவில் உண்டியல் பணத்தை திருடிய நபரை ஒப்படைத்தனர். போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அவர் பள்ளியாடி பேராளிவிளை பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்ற தங்கமணி (வயது 45) என்றும் கோவில் உண்டியலை திருடியதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஜேம்சை போலீசார் கைது செய்து, வேறு கோவில் திருட்டுகளில் தொடர்பு உண்டா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story