துபாயில் இருந்து மதுரைக்கு பூ ஜாடியில் மறைத்து தங்கம் கடத்தல் வாலிபரிடம் விசாரணை


துபாயில் இருந்து மதுரைக்கு பூ ஜாடியில் மறைத்து தங்கம் கடத்தல் வாலிபரிடம் விசாரணை
x
தினத்தந்தி 31 March 2019 10:00 PM GMT (Updated: 31 March 2019 9:59 PM GMT)

துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்தவரை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் (வயது 30) என்பவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கொண்டு வந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில், ஒரு பூ ஜாடி இருந்தது. அதை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. பூ ஜாடியை உடைத்து பார்த்தபோது அதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான 150 கிராம் எடை கொண்ட தங்க துகள்கள் இருந்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், வேறுயாரோ ஒருவர் அந்த ஜாடியை கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஸ்டீபனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story