கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்


கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 1 April 2019 10:45 PM GMT (Updated: 1 April 2019 6:16 PM GMT)

கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது என கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.

நாமக்கல், 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வனத்தை ஒட்டி உள்ள வருவாய் கிராமங்களில் வசிக்கும் மக்கள் வனப்பகுதிகளில் ஏற்படும் தீயானது, தங்கள் பகுதிக்குள் பரவாத வண்ணம் தங்கள் கிராமங்களை சுற்றியுள்ள காய்ந்த இலை சருகுகளை அப்புறப்படுத்தி, 6 மீட்டர் அகலத்திற்கு காப்பு காடுகளை ஒட்டி தீத்தடுப்பு வளையம் அல்லது தீத்தடுப்பு கோடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

வன கிராமம் மற்றும் வருவாய் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவை இல்லாத பொருட்கள் மற்றும் குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.

வனத்தையொட்டி உள்ள வன பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் சமையலுக்கு விறகு அடுப்பை பயன்படுத்தினால், பயன்படுத்திய பிறகு உடனடியாக கவனமாக நெருப்பை அணைத்து விட வேண்டும். அவ்வாறு விறகு அடுப்பை பயன்படுத்தும்போது எப்போதும் எச்சரிக்கையாக ஒரு தொட்டி தண்ணீர் மற்றும் சாக்குகள் தயார் நிலையில் வைத்து நெருப்பு ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், அவற்றை ஈர சாக்கு பயன்படுத்தி அணைத்து விட வேண்டும்.

வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களில், கிராமத்தின் எல்லை பகுதியாக உள்ள இடங்களில் எப்போதும் எளிதில் அள்ளி நெருப்பை அணைக்க பயன்படும் வகையில் மண் குவியல்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

காப்பு காட்டை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் எக்காரணத்தை கொண்டும் தீப்பற்ற வைக்கக்கூடாது. அப்படி ஏதேனும் தீ வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அப்பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட வன அலுவலர் மற்றும் வருவாய் அலுவலருக்கு தகவல் அளித்து மிகுந்த முன்எச்சரிக்கையுடன் இப்பணியினை கையாள வேண்டும்.

கொல்லிமலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி நபர்கள் வனத்திற்குள் அத்துமீறி நுழைவதோ அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு கொண்டு செல்லவோ கூடாது. மீறுபவர்கள் மீது கிராம வனக்குழுக்கள் மற்றும் வனத்துறை மூலம் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களில் தீ ஏற்படுவதை பார்வையிட்டால், உடனடியாக வனத்துறை அலுவலர்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story