வியாசர்பாடியில் மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் சுற்றிய 2 ரவுடிகள் கைது


வியாசர்பாடியில் மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் சுற்றிய 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 1 April 2019 9:45 PM GMT (Updated: 1 April 2019 7:08 PM GMT)

வியாசர்பாடியில் கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் அதிகமாக உள்ளதாக பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வந்தன. இதையடுத்து வியாசர்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் முனிராஜ், பரமசிவம் ஆகியோர் வியாசர்பாடி கல்லுக்கடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர். ஆனால் அவர்கள், நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 2 பேரையும் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

அவர்களை சோதனை செய்தபோது, ஒருவர் தனது இடுப்பில் கத்தி வைத்து இருந்தது தெரியவந்தது.

பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், புளியந்தோப்பு குருசாமி நகரைச் சேர்ந்த சபீர்கான்(வயது 21) மற்றும் வ.உ.சி. நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (20) என்பதும், ரவுடிகளான இவர்கள் மீது வியாசர்பாடி, ஓட்டேரி ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story