சீரான குடிநீர் வழங்கக்கோரி ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


சீரான குடிநீர் வழங்கக்கோரி ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 April 2019 10:15 PM GMT (Updated: 1 April 2019 7:18 PM GMT)

சீரான குடிநீர் வழங்கக்கோரி ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஓமலூர், 

ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி ஊராட்சி சின்ன நடுப்பட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு மேட்டூர் குடிநீர் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. தற்போது வெயிலின் காரணமாக ஆழ்துளை கிணற்று தண்ணீரும் கிடைக்காததால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

இதையறிந்து அங்கு வந்த ஊராட்சி அதிகாரிகளிடம் சீரான குடிநீர் வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சின்ன நடுப்பட்டி பகுதிக்கு நேரடியாக வந்து சீராக தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story