கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு, ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா


கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு, ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 1 April 2019 11:00 PM GMT (Updated: 1 April 2019 10:44 PM GMT)

கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்து உள்ளனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரல்பட்டி ஊராட்சியில் கட்டிட அனுமதி பெறாமல் கோழிப் பண்ணை கட்டும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதற்கிடையில் கோழி பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் கலெக்டர், சப்-கலெக்டர், ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோழிப்பண்ணைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

பின்னர் பொதுமக்களிடம் துணை சூப்பிரண்டு ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சிகள் சட்டப்படி கோழிப் பண்ணை அமைக்க எந்தவித கட்டிட அனுமதியும் பெறவில்லை என்றனர். இதையடுத்து துணை சூப்பிரண்டு பொதுமக்களிடம் ஒரு புகார் மனுவை எழுதி ஒன்றிய அதிகாரிகளிடம் கொடுங்கள்.

பின்னர் அதிகாரிகள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் தற்காலிகமாக கட்டிட பணிகள் நடைபெறுவதை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையொட்டி சப்- கலெக்டர் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வீரல்பட்டி கிராமத்தில் குடியிருப்புகள், முதியோர் காப்பகம் மற்றும் நகர் ஊரமைப்பு துறையிடமும்,அனுமதி பெற்ற குடியிருப்புகள் அருகில் எந்த துறைகளிடம் முறையான அனுமதி பெறாமல் கோழிப்பண்ணை அமைக்க கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் சுகாதார துறையின் முறையான விதிமுறைகளுக்கு உட்பட்டு தடையின்மை சான்று பெறவில்லை. சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் ஆட்சேபனை காரணமாக கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டது. தற்போது கட்டிட பணி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே நடவடிக்கை எடுக்க அரசு காலதாமதம் செய்தால் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையை பொள்ளாச்சி வருவாய் கோட்டாச்சியரிடம் ஒப்படைப்போம். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

கோழி பண்ணை அமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை. இதுதொடர்பாக ஏற்கனவே கோழி பண்ணை நிர்வாகத்துக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கு அவர்கள் கோழி பண்ணை வேளாண்மை துறையின் கீழ் வருவதால் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் அனுப்பினார்கள். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கோட்டூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அனைத்து அனு மதியும் பெற்ற பிறகு பணிகளை தொடர வேண்டும். அதுவரைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story