வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக சர்ச்சை கருத்து: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்


வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக சர்ச்சை கருத்து: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
x
தினத்தந்தி 2 April 2019 10:45 PM GMT (Updated: 2 April 2019 8:02 PM GMT)

வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக சாம்னாவில் சர்ச்சை கருத்து வெளியிட்டதற்காக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மும்பை,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையாகுமார் நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் ‘ரோக் தோக்' என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலையங்கம் வெளியானது. இதில், கன்னையா குமார் ஒரு விஷம். அவரை கட்டாயமாக நாடாளுமன்றத்துக்குள் விடக் கூடாது. எனவே பா.ஜனதா வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்தாவது அவரை தோற்கடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

சாம்னாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதி மீறப்பட்டு உள்ளதாக சாம்னா ஆசிரியர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது தொடர்பாக மும்பை நகர கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவாஜி ஜோந்தலே அனுப்பி உள்ள நோட்டீசில், சஞ்சய் ராவத்தின் கருத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பிக்கையை குறைப்பதாகவும், தேர்தல் நடைமுறையை மண்ணாக்குவது போல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகையில், ‘தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ள நோட்டீசுக்கு எங்களது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிப்போம்’ என்றார்.

Next Story