காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க. வேட்பாளர்கள் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பு


காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க. வேட்பாளர்கள் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 2 April 2019 10:30 PM GMT (Updated: 2 April 2019 9:23 PM GMT)

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று காலை அவர் செங்கல்பட்டு அடுத்த மண்ணிவாக்கம், வண்டலூர், ஊனைமாஞ்சேரி, ரத்தினமங்கலம், வேங்கடமங்கலம், கண்டிகை, கீரப்பாக்கம், குமுளி உள்ளிட்ட கிராமங்களில் திறந்தவேனில் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்கள் திரைப்பட இயக்குனர் ரவி மரியா, நடிகர் அஜய் ரத்தினம் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா ஆகியோர் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர். கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று ஆதரவு திரட்டினர்.

இதே போல் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஜி. செல்வம் போட்டியிடுகிறார். அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் வெள்ளரி அம்மன் கோவில், நேரு நகர் உள்ளிட்ட 15 வார்டுகளிலும், காஞ்சீபுரத்தை அடுத்த வெங்கடாபுரம், திருப்பருத்திக்குன்றம், தாயார் குளம், காமாட்சி அம்மன், காலனி அரசு நகர், ஓரிக்கை, திருக்காலிமேடு, நத்தப்பேட்டை, தேனம்பாக்கம், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தி.மு.க. வேட்பாளர் செல்வத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலைகள் அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் வேட்பாளர் ஜி. செல்வத்துடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின் போது காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜீ.வீ. மதியழகன், ஓன்றிய செயலாளர்கள், பி.சேகர், பி.எம் குமார், கே.பி.குமணன், மாவட்ட பிரதிநிதிகள் சுகுமார், வாலாஜாபாத் தியாகராஜன், வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பாண்டியன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் ஏ.வி.சுரேஷ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டி போட்டு பிரசாரம் செய்தனர்.

Next Story