சேலத்தில் வாலிபரிடம் நகை, பணம் பறிப்பு
சேலத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபரிடம் நகை, பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம்,
சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குமார் (வயது 28). இவர் ரெட்டியூர் பகுதியில் உள்ள அண்ணாதிடல் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மர்ம ஆசாமி ஒருவர் நடந்து வந்தார்.
திடீரென்று குமாரை அந்த மர்ம ஆசாமி வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டார். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரம், கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி என மொத்தம் ரூ.27 ஆயிரம் மதிப்பிலான நகை, பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதை பார்த்த குமார் சத்தம் போட்டார். இதைகேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வந்து மர்ம ஆசாமியை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் அழகாபுரம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கன்னங்குறிச்சியை சேர்ந்த தீனதயாளன் என்று தெரிய வந்தது.
தொடர்ந்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story