மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை: தேர்தல் வெற்றி மூலம் கவர்னரை திருப்பி அனுப்பும் நேரம் வந்துவிட்டது நமச்சிவாயம் பேச்சு


மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை: தேர்தல் வெற்றி மூலம் கவர்னரை திருப்பி அனுப்பும் நேரம் வந்துவிட்டது நமச்சிவாயம் பேச்சு
x
தினத்தந்தி 3 April 2019 11:30 PM GMT (Updated: 3 April 2019 9:24 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பெறும் வெற்றி மூலம் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் கவர்னரை திருப்பி அனுப்பும் நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம் கூறினார்.

வில்லியனூர்,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் வில்லியனூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தலைவர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்தனர்.

பின்னர் வேட்பாளர் வைத்திலிங்கத்தை அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

புதுவையில் தற்போது ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு, வழங்குவதற்கான தயார் நிலையில் உள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டு உள்ளது. பல அரசு துறைகளில் சம்பளம் வழங்க முடியாமல் உள்ளது. இவை அனைத்துக்கும் தீர்வு காண மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் மட்டுமே முடியும்.

நலத்திட்டங்களை செயல்படுத்த முட்டுக்கட்டையாக உள்ள பா.ஜ.க. ஆட்சியின் ஏஜெண்டான கவர்னரை திருப்பி அனுப்பும் நேரம் வந்துவிட்டது. அதற்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் கை சின்னத்துக்கு வாக்களித்து நமது வேட்பாளர் வைத்திலிங்கத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து, மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைய அனைவரும் பாடுபடவேண்டும்.

இங்கு வந்துள்ள கூட்டணி கட்சியினர் சிறு சிறு மனக்கசப்பு இருந்தாலும், அதனை மறந்து காங்கிரஸ் கட்சியினருடன் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த சட்டமன்ற தொகுதியில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்தீர்கள். ஆனால் அதற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளரை வெற்றிபெற செய்யவேண்டும்.

இதனால் அடுத்த 2 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மக்கள் நலத்திட்டங்களை விரைவில் வழங்க முடியும்.

இங்குள்ள முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் பல்வேறு காலங்களில் பல பொறுப்புகளில் தனது நிர்வாகத் திறமையை நிரூபித்தவர்கள். ஆனால் அவர்களுடைய கைகள் தற்போது கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டுகள் தகர்க்கப்படும் நேரமும் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story