பெரம்பலூரில் பெயிண்டர் கொடூர கொலை நண்பர்களிடம் போலீசார் விசாரணை


பெரம்பலூரில் பெயிண்டர் கொடூர கொலை நண்பர்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 April 2019 11:00 PM GMT (Updated: 4 April 2019 6:57 PM GMT)

பெரம்பலூரில் பெயிண்டர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரம்பலூர் சுடுகாடு எதிரே புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் பகுதியில் நேற்று காலையில் சுமார் 30 வயதுடைய ஆண் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர்.

இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் பெரம்பலூர் மாவட்டம், புதுநடுவலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் சந்திரசேகர் (வயது 33) என்பதும், அவருக்கு திருமணமாகி மஞ்சு என்கிற மனைவியும், 2 மகன்கள் உள்ளதும் தெரியவந்தது. மேலும் சந்திரசேகர் பெரம்பலூர் பகுதியில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வந்தார். சந்திரசேகர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் சிமெண்டு செங்கல்கள் ரத்த கறையுடனும், காலி மது பாட்டில்களும் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பெரம்பலூர்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சந்திரசேகரின் நண்பர்கள் சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூரில் பெயிண்டர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story