தாயிடம் தகராறு செய்த தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற அண்ணன்-தம்பி கைது


தாயிடம் தகராறு செய்த தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 4 April 2019 10:15 PM GMT (Updated: 4 April 2019 7:23 PM GMT)

கபிஸ்தலம் அருகே தாயிடம் தகராறு செய்த தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள இளங்கார்குடி மேலத் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ்(வயது 56). விவசாயியான இவரது மனைவி லலிதா(42). இவர்களுக்கு ராஜ்குமார்(29), தினேஷ் குமார்(26) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

நேற்று முன் தினம் இரவு கோவிந்தராஜ் தன் மனைவி லலிதாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவர் தனது மனைவியை அடித்துள்ளார். இதனை பார்த்துக் கொண்டிருந்த அவர்களது மகன்கள் ராஜ்குமாரும், தினேஷ்குமாரும் தந்தையை திட்டி தகராறு செய்துள்ளனர்.

அப்போது கோவிந்தராஜ், தான் கையில் வைத்திருந்த அரிவாளால் மகன்களை மிரட்டியுள்ளார். இதனையடுத்து ராஜ்குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து கோவிந்தராஜை கீழே தள்ளியதுடன், அவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி அவரை வெட்டி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வேம்பு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன்கள் ராஜ்குமார், தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story